தேசிய லோக் அதாலத்தில் ரூ.576 கோடி இழப்பீடு: நிலுவையில் உள்ள 82 ஆயிரத்து 257 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன.


5 6 months ago பொதுத் தகவல்கள்

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் 82 ஆயிரத்து 257 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 576.32 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதன் முறையாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிறப்பு பார்வையாளர்களாக மாவட்டங்களுக்கு சென்று லோக் -அதாலத்தை தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இந்தாண்டுக்கான கடைசி தேசிய லோக் அதாலத் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான கே.ஆர் ஸ்ரீராம் அறிவுறுத்தலின்படி, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரும் நீதிபதியுமான எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் உயர் நீதிமன்ற சட்டப்பணி கள் ஆணைக்குழு தலைவரான நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் ஆகியோரது மேற்பார்வையில் நடத்தப்பட்ட இந்த லோக்-அதாலத்தில் சென்னை உயர் நீதிமன்றத் தில் 8 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 4 அமர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தர் மோகன், பி.பி.பாலாஜி. ஜி.அருள் முருகன், எம்.ஜோதிராமன் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ். கே.கிருஷ்ணன், ஜி.சொக்கலிங்கம், எம்.ஜெயபால், பி.கோகுல் தாஸ் ஆகியோரது தலைமையிலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஆர்.கலைமதி, பி.வடமலை, என்.செந்தில்குமார், ஆர்.பூர்ணிமா ஆகியோரது தலைமையிலும் அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதேபோல மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களிலும் 429 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன

இந்த முறை முதன்முறையாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாவட்ட அளவில் நடைபெறும் தேசிய லோக்-அதாலத்தில் சிறப்பு பார்வையாளர்களாக பங்கேற்று, அதை தொடங்கி வைத்து ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். அதன்படி மூத்த நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் திருவண்ணாமலை மாவட்டத்துக்கும், நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா கடலூர் மாவட்டத்துக்கும், நீதிபதி எம்.தண்டபாணி கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கும், நீதிபதி கே.ராஜசேகர் விழுப்புரம் மாவட்டத்துக்கும் சிறப்பு பார்வையாளர்களாக சென்று லோக்- அதாலத்தின் மூலம் தீர்வு காணப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினர்.



News source: the Hindu Tamil news paper 

பொதுக் தகவல் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்