பல்வேறு துறைகளைச் சேர்ந்த 55 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்' - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;- "இந்தியாவின் முக்கியமான அங்கம் நம் தமிழ்நாடு. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 3-வது ஆண்டாக தேசியக் கொடியை ஏற்றி வைப்பதில் பெருமை கொள்கிறேன். சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றுவதில் தி.மு.க. அரசு யாருக்கும் சளைத்தது அல்ல. மாறுபாடு உள்ளது.வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையுடன் வாழ்வதே நம் பலம்.மதங்களின் பெயரால் மக்களிடையே உள்ள பிளவை களைய முயன்றவர் மகாத்மா காந்தி.
தாய்நாட்டிற்காக தங்களுடைய இளம் வயதை நாட்டின் எல்லையில் ராணுவப் பணியில் ஈடுபடுத்தி, பணிக்காலம் நிறைவு பெற்று திரும்பும் முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் நபர்களுக்கு உரிய பயிற்சிகள், திறனை மேம்படுத்துதல், அவர்களுக்கு உரிய பணியில் அமரும் வரை தக்க உதவி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 55 ஆயிரம் அரசுப் பணியிடங்களை நிரப்புகிறோம். அனைவருக்கும்மான அரசு என்பதன் அடையாளமாக திட்டங்களைச் சிந்தித்து செயல்படுத்தி வருகிறோம். ஒற்றுமையால் கிடைத்த விடுதலை அதே ஒற்றுமையால் காப்போம். வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம். என்று கூறினார்